பிரபலப் பொருளியல் ஆசானும் தமிழ்த்தேசிய அரசியலின் தீவிர செயற்பாட்டாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவருமான சி.வரதராஜன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (20.08.2014) நடைபெற்றது.
பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகளும் அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்று அவரது புகழுடல் அதன்பின்னர் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள DCM கல்வி நிறுவனத்தில் மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் அஞ்சலி செலுத்தியபின் அவரது புகழுடல் கோம்பையன் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், க.சிவாஜிலிங்கம், க.சர்வேஸ்வரன், கே.சயந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் உட்பட அனேக அரசியல் பிரமுகர்களும் அதிக எண்ணிக்கையான பொது மக்களும் பெருந்தொகையான மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.