Ad Widget

தெல்லிப்பழையில் விறகுவெட்டச் சென்ற இளைஞர்களை கட்டிவைத்து தாக்கிய கும்பல்!

தெல்லிப்பழையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற இளைஞர்கள் மற்றொரு இளைஞர் குழுவினால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஏழாலை, மல்லாகம் பகுதியில் குறிப்பிட்ட சில இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதுடன் மதுபோதையில் கெட்டவார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டு வீதியால் செல்பவர்களை அச்சுறுத்தி வந்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அறிவித்தும் எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்த நிகழ்வையும் குறிப்பிட்ட இளைஞர் குழுவினரே மேற்கொண்டுள்ளார்கள் என பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

தெல்லிப்பழைக்கு விறகுவெட்டச் சென்ற மல்லாகம் கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையும் வாள்வெட்டு சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து அண்மையில் பிணையில் வெளிவந்த ஒரு குழுவினர் பிடித்து ஏழாலையைச் சேர்ந்த குழுவினரிடம் ஒப்படைத்தனர் எனவும் – அவர்கள் குறிப்பிட்ட இளைஞர்களை வயல் வெளியின் ஓரத்தில் உள்ள மரத்தில் கட்டி வைத்து போத்தல்கள் பொல்லுகள் கொண்டு தாக்கினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேளையில் ஓர் இளைஞர் தப்பி வந்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Posts