Ad Widget

தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டம்

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி உள்ளூர் மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துகின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகர் பண்ணையிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் அலுவலகத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதங்களாக அப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் செயற்பாட்டை கடற்றொழில் நீரயல் வளத் திணைக்கள அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தென்னிலங்கை மீனவர்களால் முன்னெடுக்கப்படும் கடலட்டை பிடிக்கும் தொழிலை நிறுத்தி, அவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதுடன் வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலை முற்றாக தடைசெய்யுமாறு வலியுறுத்தியும் உள்ளூர் மீனவர்களால் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Posts