Ad Widget

தென்னிலங்கையில் தொடரும் கொடூரம்!! மற்றுமொரு சிறுமி பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை

காலி, அக்மீமன ஜனபாலா பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்மீமன குருந்துவத்த பகுதில் உள்ள ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெமுனி பூஜானி என்ற 8 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி வீட்டுக்கு அருகில் இருந்த தேயிலைத் தோட்டமொன்றில் இரத்த கறையுடன் கூடிய உடையுடன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிரதேச மக்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி கடந்த 16 ஆம் திகதி பாடசாலை முடிவடைந்து தனது 12 வயதுடைய சகோதரியுடன் வீட்டுக்கு வந்துள்ளார்.

சிறுமியின் அக்கா பிரத்தியேக வகுப்புக்குச் சென்றுள்ளார். அம்மா தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காகவும் அப்பா மற்றுமொரு வேலைக்காகவும் சென்றுள்ளார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாய், வீட்டில் தனிமையாக இருந்த சிறுமியை காணாது தேடியுள்ளார். இதனையடுத்து சுமார் மாலை 6.30 மணியளவில் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் பிரதேச மக்களும் மேற்கொண்ட தேடுதலில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலி மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் குனேந்திர குமார மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக காலி கரபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவிலே சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில் இதேபோன்று ஐந்து வயதுடைய சிறுமி ஒருவர் இனந்தெரியாத நபரால் கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts