Ad Widget

தூய நீருக்காக திரண்டனர் மக்கள்: எழுத்துருவில் பதில் கிடைக்கும் வரை தொடரும் உண்ணாவிரதம்

கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் இன்று காலை 10மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தூய குடிநீருக்காக திரண்ட யாழ்ப்பாண மக்களின் கோரிக்கைகள் வருமாறு,

பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் நீர் குடிநீர் பயன்பாட்டிற்கு உகந்ததா? இல்லையா?

தூய நீருக்கான செயலணியானது கௌரவ ஆளுநர்,கௌரவ முதலமைச்சர்,அரச அதிபர் ஆகியோரின் கூட்டுத்தலைமையின் கீழ் மீள் ஒருங்கமைக்கப்பட வேண்டும்.

மின் உற்பத்தி நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒயில் மற்றும் கிறீஸ் கழிவுகளை அகற்றி எமது நீரை நாமே பயன்படுத்தக்கூடியதாக குறுகிய,இடைத்தர,நிரந்தர தீர்வினை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து அவற்றினை சிறப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

தற்காலிகமாக வழங்கப்படும் குடிநீரினது தரஉறுதிப்பாடு, சீரான வழங்கல்,நீர் பெறப்படும் மூலம் தொடர்பில் பொருத்தமான அதிகாரிகளின் உறுதிப்படுத்தலும் மேற்பார்வையும் இருத்தல் வேண்டும்.

இந்த பாரிய அனர்த்தம் ஏற்பட காரணமாகவிருந்தவர்களுக்கும், தங்கள் கடமைகளை சரிவர செய்யத் தவறியவர்களுக்கும் எதிராக மத்திய மற்றும் மாகாண அரசு மட்டங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறித்த விடயங்களை வெளிக்கொணரும் அரச அதிகாரிகள்,மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் மீது ஏற்படுத்தப்படும் மறைமுக அழுத்தங்கள் ,பழிவாங்கல்கள், என்பன ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.

மீள்ஒருங்கமைக்கப்படும் செயலணியானது இது தொடர்பில் உல சுகாதார நிறுவனம் போன்ற துறைசார்ந்த நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நிபுணர் குழுவின் குறைபாடுகள் நீக்கப்பட்டு மீளமைப்புச் செய்யப்பட வேண்டும்

மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பொருட்டு மீள் ஒழுங்கமைக்கப்படும் செயலணியின் செயற்பாடுகள் பற்றி வாராவாரம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

அத்துடன் செயலணியானது மிகவிரைவாக குறைந்தது 72 மணித்தியாலங்களுக்குள் கூட்டப்பட வேண்டும்

ஆகிய அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், இவற்றுக்கான எழுத்து மூலமான திறந்த பதில் கிடைக்கும் வரை உணவும்,நீரும் அற்ற சாத்வீகமான உண்ணாவிரத போராட்டம் நல்லூர் முன்றலில் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த போராட்டத்தின் முடிவில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர் வடமாகாண ஆளுநர் இருவரும் இல்லாத பட்டசத்தில் அவர்களது செயலாளர்களிடமும் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகத்திடமும் தூய நீருக்கான மக்கள் ஒன்றியத்தின் புரவலர் சிவசங்கர் மகஜரை அவர்களிடம் கையளித்தார்.

Related Posts