Ad Widget

துஷ்பிரயோக வதந்தி பரப்பிய இருவருக்கு எதிராக முறைப்பாடு

அச்சுவேலி வடக்கு பகுதியில் பாடசாலை செல்லும் பதின்மூன்று வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாக கட்டுக்கதை பரப்பிய இருவருக்கு எதிராக சிறுமியின் பெற்றோர், வெள்ளிக்கிழமை (29) முறைப்பாடு செய்துள்ளனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு செல்லும் தனது மகளை மீன் வியாபாரி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வருவதாக அவ் இருவரும் ஊருக்குள் கதை பரப்பியுள்ளனர்.

ஊருக்குள் பரப்பப்பட்ட பொய் வதந்தியினை நம்பிய பொலிஸார், சிறுமியினை அழைத்து சென்று கடந்த 24ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

இதன்போது மருத்துவ அறிக்கையோ அவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்று வழங்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி சம்பவம் குடும்ப பகை காரணமாக, அந்தக் குடும்பத்தினை பழிவாங்கும் முகமாக மேற்படி இருவரும் சிறுமி தொடர்பில் பொய் வதந்தி பரப்பியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சம்பவத்தால் தனது மகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை செல்லவும் தயங்குகிறாள் என்று பெற்றோர் வெள்ளிக்கிழமை (29) அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தவறான தகவலை பரப்பிய இருவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts