Ad Widget

தீர்வுக்கு புதிய அத்திபாரம் மைத்திரி – வடக்கு முதல்வர்

பெரும்பான்மையினரும் சிறுபான்பான்மையினரும் இணைந்து நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளோம். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு சிறந்த அத்திவாரம் மைத்திரிபால சிறிசேன என, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

vicky0vickneswaran

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில் வடக்கு முதலமைச்சர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லதொரு முடிவை என் இனிய தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் தேர்தலில் எடுத்துள்ளார்கள். நாங்கள் மனமுவந்து வாக்களித்து ஒரு புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுத்துள்ளோம்.

பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டின் தலைவர் மைத்திரிபால சிறிசேன.அவரின் கீழ் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன்.

அதுமட்டுமல்ல அறுபது வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாது இருக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சுமுகமான தீர்வை எட்டுவதற்கான அத்திபாரம் நாட்டப்படும் என்றும் நம்புகின்றேன்.

அவருக்கு இது சார்பான எங்கள் மக்களின் சகல ஒத்துழைப்புகளுக்கும் உதவிகளும் அளிக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்.

ஒரு மண்ணின் மைந்தனான அவர் சிறுபான்மையினரின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணிக்கமாட்டார் என்று நாம் நம்பலாம். பல கடினமான பணிகள் அவரைச் சார்ந்துள்ளன.

அண்மைய காலங்களில் இயற்கை அனர்த்தங்களினால் இன்னல்கள் பலவற்றிற்கு ஆளாகியிருக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் வாழ்க்கையை சீரமைக்க வேண்டிய கடப்பாடு , பெரும்பான்மை மதவெறியின் தாக்கத்தினால் மருண்டு போயிருந்த முஸ்லிம் மக்களை அணைத்து எடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடும் உண்டு.

அதுபோல, போர் முடிந்தும் அளவுக்கு அதிகதினமான இராணுவ பிரசன்னத்தினாலும் அவர்களின் உள்ளீட்டல்களாலும் அல்லலுறும் எமது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரங்களும் வாழ்க்கை நிலையையும் சீரமைத்து மாற்றியமைக்க வேண்டிய கடமையும் அவரைச் சார்ந்து நிற்கின்றது.

எனவே அவர் அவை சம்பந்தமாகப் போதிய கவனம் செலுத்துவார் என்பதில் என் மனதில் சந்தேகம் இல்லை.

ஜனநாயகத்தை நிலைக்க செய்வதனால் பொறுமை, நம்பிக்கை, காருண்யமனோநிலை யாவும் அவசியம். அவற்றை நாம் கடைப்பிடித்தே ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு வித்திட்டுள்ளோம்.

வருங்காலம் புதியதொரு தசாப்தத்தை உண்டுபண்ணட்டும். எமது தேவைகளை அறிந்து எமது மனோநிலைகளைப் புரிந்து நாட்டை ஆள்வோர் செயற்படட்டும்.

பல வித அச்சுறுத்தல்கள், அல்லல்கள் , அவலங்கள் மத்தியிலும் நாம் எமது கடமைகளைச் செய்துவிட்டோம். புதிய தலைமைத்துவம் எம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

நாம் எல்லோரும் மகிழ்வுடனும் சுதந்திரத்துடனும் , உணர்வுடனும் , தனித்துவத்துடனும் ஐக்கிய இலங்கைக்குள் வாழ வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts