Ad Widget

தீர்மானம் குறித்து அமெரிக்கா, இந்தியாவுடன் கூட்டமைப்பு பேச வேண்டும்! – சுரேஸ்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையின் முதலாம் வரைபு இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரேரணையில் திருத்தங்கள் செய்யப்படாமலிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் பேசவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் நாட்களில் இலங்கை தொடர்பான பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால், முன்மொழியப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த பிரேரணையின் முதலாவது கட் டம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். கடந்த 16ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையினை வெ ளியிட்டிருக்கும் நிலையில் அதனை ஒட்டியதாகவே, பிரேரணை அமைந்திருக்கும்.

எனவே பிரேரணையில் தமிழ் மக்களுக்கு சார்பாக உள்ள விடயங்களையும், முன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலப்பு சிறப்பு நீதிமன்றம் என்ற விடயத்தையும் இலங்கை அரசாங்கம் நீக்கும் அல்லது அவற்றை நீக்கக்கோரும் சாத்தியங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த விடயங்களை நீக்காது பார்த்துக் கொள்ளவும் பிரேரணை முழுமையான வடிவத்தில் வருவதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts