Ad Widget

தீருவில் பூங்கா இராணுவத்தினராலேயே அடித்து நொருக்கப்பட்டுள்ளது; த.தே.கூ குற்றச்சாட்டு

tnaவல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா வெள்ளி இரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

குறித்த பூங்கா அடித்து நொருக்கப்பட்டதன் பின்னணியில் இராணுவத்தினரே இருப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் நினைவிடம் ஒன்று அமைந்திருந்த நிலையில் அது யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் அடித்து நொருக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து அந்தப் பகுதியில் வல்வெட்டித்துறை நகரசபைக்குச் சொந்தமான பூங்காவை நகரசபை புனரமைத்து மக்கள் பாவனைக்கு விட்டிருந்தது.

இதேவேளை அந்தப் பகுதி இராணுவத்தினருக்குச் சொந்தமானது எனக்கூறி அதனை மீளவும் தம்மிடம் தரவேண்டும் எனவும் இராணுவத்தினர் வல்வெட்டித்துறை நீதிமன்றில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் அதனை அவ்வாறு வழங்க முடியாதென நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அண்மையில் நகரசபை தலைவரின் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் அங்கிருந்த மடிகணனியை திருடிச் சென்று அதிலுள்ள ஆவணங்களை பரிசீலித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வெள்ளி பூங்காவிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் பூங்காவின் பெயர் பலகை உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இராணுவமே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பூங்காவை உடைத்துச் சேதப்படுத்தும் அநாகரீகமான செயற்பாடுகளை மக்கள் செய்ய மாட்டார்கள், செய்ய வேண்டிய அவசியமும் அவர்களுக்கு கிடையாது எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts