Ad Widget

திருமணம் நடைபெறவிருந்த யுவதி கடத்தல்

திருமணம் நடைபெறவிருந்த யுவதியொருரை இனந்தெரியாதவர்கள் முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்ற சம்பவம் சனிக்கிழமை (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

மூளாயைச் சேர்ந்த யுவதிக்கும் கனடாவைச் சேர்ந்த ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (21) பதிவுத் திருமணம் நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளதாக யுவதியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மாப்பிள்ளை வீட்டாரின் உறவுக்கார பெண்ணொருவருடன் குறித்த யுவதி யாழ்ப்பாண நகருக்கு செல்வதற்காக பஸ்ஸில் சென்றுள்ளார். குறித்த பஸ் மூளாய் வீதியூடாக சுழிபுரம் நோக்கி சென்றபோது, பஸ்ஸை சில நிமிட நேரம் நிறுத்திய பஸ் சாரதி, அலைபேசியில் ஒருவருடன் உரையாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து முச்சக்கரவண்டியில் வந்த இளைஞர் ஒருவர் பஸ்ஸுக்குள் புகுந்து யுவதியைப் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இதற்கு முச்சக்கரவண்டியின் சாரதியும் உதவியதாகவும் பஸ்ஸின் சாரதியோ நடத்துனரோ அதைத்தடுப்பதற்கு முற்படவில்லையெனவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுவதியின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, தனியார் சிற்றூர்தி சங்கத்தின் காரைநகர் பிரிவுத் தலைவரை அழைத்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts