Ad Widget

திருநெல்வேலி பொதுச்சந்தை மீண்டும் வேறு இடத்துக்கு இடம்பெயர்கிறது!

யாழ்ப்பாணம், கலாசாலை வீதியில் தற்காலியமாக இயங்கிவந்த திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மறுதினம் முதல் ஆடியபாதம் வீதியிலுள்ள தனியார் காணியில் இயங்கும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுச் சந்தைகளைத் திறப்பதில் அச்சம் காணப்பட்டமையினால், யாழ்ப்பாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மக்கள் ஒன்றுகூடாதவண்ணம் சமூக இடைவெளியினை பேணக்கூடிய வகையில் மாற்று இடங்களில் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நல்லூர் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக திருநெல்வேலி கலாசாலை வீதியில் இடம்பெற்றுவந்தது.

இந்நிலையில், திருநெல்வேலி, கலாமன்ற சனசமூக நிலையத்தின் குறித்த பகுதியில் சன நெருக்கடி அதிகரித்துக் காணப்படுவதாகவும் மழை நாட்கள் என்பதால் வெள்ளநீர் தேக்கம் காரணமாக மக்கள் அசௌகரியத்திற்கு முகம் கொடுப்பதாகவும் குறித்த சந்தை சந்தையினை வேறொரு இடத்திற்கு மாற்றுவது சிறந்தது என தெரிவித்து வடமாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு குறித்த சந்தை இடத்தினை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்காரணமாக, நாளை மறுதினம் முதல் திருநெல்வேலி கலாசாலை வீதியில் தற்காலிகமாக இயங்கிய சந்தையானது திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் இயங்கவுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts