Ad Widget

திருகோணமலையில் மனிதப்புதைகுழி!

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.

இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணிகளின் போது இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி மக்கெய்ஸர் விளையாட்டு மைதானம் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த பகுதியில் சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டப்பகுதியில் ஏற்கனவே நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு காவல்துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.திருகோணமலை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜா முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை அகழ்வுப்பணிகள் ஆரம்பமானபோது சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

நேற்று புதன்கிழமை மூன்றாவதுநாளாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றபோது நான்கு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.இந்த மனித எச்சங்கள் அனைத்தையும் சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்குமாறு காவல்துறையினரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.நாளை வெள்ளிக்கிழமையும் இந்த அகழ்வுப் பணிகள் தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

Related Posts