Ad Widget

தியாகதீபம் திலீபனுக்கு மக்கள் திரண்டு அஞ்சலி

இந்திய அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு நேற்று நல்லூரில் இடம்பெற்றது.

நல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த தியாகதீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் வீரச்சாவை தழுவினார். திலீபன் வீரச்சாவடைவடைந்த நல்லூர் ஆலய வடக்கு வீதியில், காலை 10.48 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து, நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், ஈகச் சுடர் ஏற்றி, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்து கொண்டு திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்துக்குப் பின்னர், தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டமை இதுவே முதல்முறையாகும். தியாகதீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், கைதடியில் இருந்து தூக்கி காவடி எடுத்து வந்த ஒருவர், திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி தனது காவடியை நிறைவு செய்தார்.

Related Posts