எமது பிரதேச வளங்கள் சட்டவிரோதமாக சூறையாடப்பட்டு வருவதை ஒருபோதும் எங்களால் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
யாழ்.வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் தடை அனுமதியையும் மீறி மகேஸ்வரி நிதியத்தினர் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட முனைந்த போது, இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மணல் அகழ்வை பொலிஸார் மூலம் தடுத்து நிறுத்தினார்கள்.
தாங்கள் அனுமதி பெற்று மணல் அகழ்வதாக மகேஸ்வரி நிதியத்தினர் இதன்போது, பொலிஸாருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே மாவை மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கூறிய அவர், ‘இந்த இடத்தில் மணல் அகழ முடியாது. மகேஸ்வரி நிதியத்தினர் பெற்றுவைத்துள்ள அனுமதி சட்டவிரோதமாக பெறப்பட்டது’ எனக்கூறினார்.