Ad Widget

தவிசாளரை கைதுசெய்ய பொலிஸார் தீவிரம்- பிணை விண்ணப்ப பரிசீலனை ஒத்திவைப்பு!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதன்படி, பிணை விண்ணப்பத்தை நாளை புதன்கிழமை நீதிமன்றம் பரிசீலனைக்கு ஒத்திவைத்ததுடன் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்செழு அம்மன் கோயில் வீதியைச் சீரமைக்கும் பணியை ஆரம்பித்து திட்டத்திற்கான பெயர்ப்பலகை நடப்பட்டது.

அது வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது நடப்பட்டது என்ற அடிப்படையில் தவிசாளர் தியாராஜா நிரோஷ் அதனை அகற்றுவதற்குப் பணித்திருந்த நிலையில், அந்தப் பெயர்ப் பலகை கடந்த வாரம் அகற்றப்பட்டது.

பெருந்தெருக்கள் அமைச்சினால் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 100 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளைச் சீரமைக்கும் திட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, எந்தவொரு வீதியிலும் திட்டத்தின் பெயர்ப் பலகையை நடுவதற்கு அதிகாரம் உண்டு என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தச் சுற்றறிக்கையை கவனத்தில் கொள்ளாது வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், அச்செழு அம்மன் ஆலய வீதியில் நடப்பட்ட பெயர்ப் பலகையை அகற்றி அரச சொத்தைச் சேதப்படுத்தியுள்ளார் என அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அத்துடன், அச்செழு அம்மன் கோயில் வீதியைச் சீரமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணம் நிறைவேற்று பொறியியலாளரால் நவம்பர் 27ஆம் திகதியிடப்பட்ட கடிதம், வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும், வலி.கிழக்கு பிரதேச சபையின் அனுமதியின்றி அச்செழு அம்மன் கோயில் வீதியை சீரமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டதுடன், அறிவிப்பு பெயர்ப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக வலி.கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ், டிசெம்பர் இரண்டாம் திகதி குறிப்பிடப்பட்ட கடிதத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், தம்மால் 27ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் ஊடாக அச்செழு வீதி சீரமைப்புத் தொடர்பாக பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணம் நிறைவேற்றுப் பொறியியலாளரால் தவிசாளருக்கு டிசெம்பர் மூன்றாம் திகதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதேச சபைத் தவிசாளர், தியாகராஜா நிரோஷிடம் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அச்சுவேலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

அதில், அவர் பெயர்ப் பலகையை அகற்றியதற்கான தனது விளக்கத்தை வழங்கியிருந்தார். அத்துடன், அகற்றிய பெயர்ப் பலகையையும் அவர் பொலிஸாருக்குக் காண்பித்திருந்தார்.

இந்நிலையிலேயே அரச சொத்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷக் கைதுசெய்ய அச்சுவேலி பொலிஸாரால் நேற்றைய தினம் சபையின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தனர். எனினும், நேற்று காலை முதல் மாலை வரை அவர் சபைக்கு சமூகமளிக்காததால் பொலிஸார் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், தியாகராஜா நிரோஷை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்யவதைத் தடுக்கும் விண்ணப்பம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

தவிசாளர் கைது செய்யப்படுவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று குறிப்பிட்டு சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுபாஸ்கரன் உள்ளிட்டோர் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

அதனை ஆராய்ந்த மன்று விண்ணப்பத்தை நாளை பரிசீலனைக்கு எடுக்க திகதியிட்டதுடன் அன்றைய தினம் அச்சுவேலி பொலிஸாரை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.

“கடந்த சில நாட்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோயில் வீதியை சீரமைக்கவுள்ளதாக அடிக்கல்லினை நாட்டினர்.

இவ்வீதியைச் சீரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப் பெயர்ப்பலகை நடப்பட்டது.

குறித்த பெயர்ப் பலகையை நட அனுமதி பெறப்படாததால் அதனை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் (தொலைநகல் வாயிலாகவும்) அனுப்பப்பட்டது. ஒருகடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் அகற்றாத நிலையில் பிரதேச சபை ஒன்றிற்குச் சொந்தமான வீதியை மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும் வேறு நிறுவனமாக இருந்தாலும் எக்காரணம் கொண்டும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் சீரமைக்க முடியாது. இதனால், அதனை அகற்றப் பணித்தேன்” என தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts