2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
மேற்படி பரீட்சை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கிணங்க முதலாவது வினாப்பத்திரம் முற்பகல் 9. 30 முதல் 10 .45 வரை மற்றும் இரண்டாவது வினாப்பத்திரம் முற்பகல் 11. 15 முதல் 12. 15 வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் வரவு இடாப்புகள் உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் ஜூலை 25 ஆம் திகதி முதல் 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி வரை இணைய வழி மூலம் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.