Ad Widget

தமிழ் மாற்றுத் திறனாளி பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!!

பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது காவல்துறை உத்தியோகத்தரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் வலபன, வதுமுல்ல பகுதியைச் சேர்ந்த திருகோணமலை தலைமையக காவல்துறை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் – செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய விசேட தேவையுடைய பெண்ணொருவரை குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் திருகோணமலை பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனக்கு ஏற்பட்ட விடயத்தை மருத்துவரிடம் கூறியுள்ளார்.

பின்னர் அது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Posts