Ad Widget

தமிழ் மக்கள் பேரவையில் முஸ்லீம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவார்கள்! கலாநிதி லக்ஸ்மன்!

 தமிழ் மக்கள் பேரவையில் முஸ்லீம் பிரதிநிதிகளும் உள்வாங்க படுவார்கள் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான  வைத்தியர் பி. லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பேரவை எந்த காலத்திலும் அரசியல் கட்சியாக மாற்றம் அடையாது.  தமிழ் மக்கள் பேரவையில், பல்வேறு சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் , மதத்தலைவர்கள் , நிறுவனங்களை சேர்ந்தவர்கள், என பல தரபட்டவர்களும் அங்கம் வகிக்கின்றனர். அதனால் இந்த அமைப்பு எந்த கால பகுதியிலும் , அரசியல் கட்சியாக மாறாது.
தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தினை  தமிழ் மக்களே முன் வைக்க வேண்டும். அந்த தீர்வினை மக்களின் கருத்துக்களில் இருந்து உருவாக்கவே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.எனவே தமிழ் மக்கள் பேரவைக்கு அரசியல் சாயம் பூசி அதனை முடக்காதீர்க்கள்.
இந்த அமைப்புக்கு சிலர் அரசியல் சாயம் பூசுவதனால், அரசியலில் ஈடுபட விரும்பாதவர்கள் ஆனால் தமிழ் மக்களின் விடிவுக்கு தமது பங்களிப்பை செலுத்த வேண்டும் என விரும்பும் பலர் அமைப்பில் இணைய பின்னடிக்கின்றார்கள் எனவே தமிழ் மக்கள் பேரவைக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்.
 தமிழ் மக்கள் பேரவையில் முஸ்லீம் மக்கள் சார்பில் எவரும் இல்லாமை தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. முஸ்லீம் மக்கள் சார்பில் எவரும் இல்லாதது மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை தமிழ் மக்கள் பேரவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் , தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு சம்பந்தமான குழு ஆராய்ந்து முன் மொழிவுகளை மக்கள் பேரவை முன்பாக வைத்த பின்னர் தமிழ் மக்கள் பேரவையில் இணைத்துக் கொள்வோம்.
 புலம்பெயர்ந்தவர்களின் கருத்துகளையும் தமிழ் மக்கள் பேரவை ஏற்றுக்கொள்ளும், தமிழ் மக்கள் பேரவையால் முன்மொழியப்படவுள்ள தீர்வுத்திட்டம் தொடர்பிலும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பிலும் புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களையும் உள்வாங்குவோம். புலம் பெயர் நாடுகளில் வசிப்பவர்கள் துறைசார்ந்தவர்கள் அத் துறை சார்பில் முன்வைக்கும் கருத்துகளை ஆலோசனைகளை நிச்சயமாக தமிழ் மக்கள் பேரவை ஏற்றுக்கொள்ளும்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவை சேர்ந்த வலம்புரி பத்திரிகை ஆசிரியர் ந.விஜயசுந்தரம் கருத்து தெரிவிக்கும் போது  தமிழ் மக்கள் பேரவையின் அங்குரார்ப்பன நிகழ்விற்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது போனமைக்கு நாம் எமது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். அது தவறான விடயமே அன்றைய தினம் ஏற்பாட்டில் இடம்பெற்ற சில காரணங்களால் தான் ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை  என தெரிவித்தார்.

Related Posts