தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் கலந்து கொண்டமை குறித்து தமக்கு அறிவிக்கவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்டக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொது நூலகக் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத் தொடரில் தாம் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பங்கேற்றார் என பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பீடத்துக்கு அறிவிக்காமல் பேராசிரியர் சிற்றம்பலம் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்றமை தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.