Ad Widget

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை புதிய அரசாங்கம் தர வேண்டும்!

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.

sampanthan

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் பங்களிப்புச் செய்ததன் பேரிலேயே தாங்கள் அரசியல் ரீதியாக முதல் முறையாக பதவியிலிருந்த ஜனாதிபதியை தாங்கள் தோற்கடித்திருக்கின்றீர்கள்.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் கூட்டு ஆதரவினாலேயே தாங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள்.

இந்தத் தெரிவு உங்களது பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது எனக் கருதுகின்றேன். சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தங்களது உரையின்போது வடக்கிலும், தெற்கிலும் வாழும் மக்களின் மனங்களை இணைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டதை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுபீட்சமான நல்லாட்சிக்காகவே எமது கட்சி ஆதரவளித்ததுடன், எமது மக்களும் தங்களது வாக்குகளை உங்களுக்கு அளித்துள்ளார்கள். நீண்டகாலமாக வடக்கு, கிழக்கு மக்கள், ஆட்சியிலிருந்த அரசுகளால் ஒதுக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

கடந்த காலத்தில் சர்வாதிகாரம் பின்பற்றப்பட்டமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்த நிலைமை மாறவேண்டும். ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் கருமங்கள் சுதந்திரமாகவும், ஜனநாயகத் தன்மையாகவும் அமையவேண்டும் என்பதற்காக ஆதரவை வழங்கியுள்ளோம்.

கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் – குறிப்பாக, மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்றவற்றுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. சர்வாதிகார முறையினூடாக சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது.

மக்கள் ஜனநாயகத்தை இழந்திருந்தார்கள். ஜனநாயகம் என்பது பெறுமதியானது. எல்லோராலும் எல்லா நிலையிலும் மதிக்கப்படவேண்டும். அப்போதுதான் முழுமையான ஆட்சியைப் பெறமுடியும். ஒருமித்த நாட்டில் ஒரு நிலைத்த – நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை வேண்டியே தமிழ் மக்கள் நீண்டகாலத்திற்குப் பின்னர் ஜனநாயகத்திற்குத் தமது பரிபூரண ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

அதில் அதிக விசுவாசமுடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள். அவ்வாறான விசுவாசத்தை அரசிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர். திருகோணமலை, இந்து மக்கள் அதிகமாக வாழும் புனித பூமியாகும். இங்கு திருக்கோணேஸ்வரர் எனப்படும் தட்சண கைலாயபதியும், சக்திமிக்க காளி அம்மன் ஆலயமும், வில்லூன்றிக் கந்தசுவாமி எனப்படும் சிறப்புமிக்க முருகன் ஆலயமும் காணப்படுகின்றன.

இவ்வரலாற்றுப் பெருமைமிக்க ஆலயங்களுக்கு அனைத்து மக்களும் இன, மொழி, மத பேதமின்றி வருகை தந்து வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

அவ்வாறிருக்கையில், உங்களுடைய நல்லாட்சிக்கும் எல்லாம் வல்ல மேற்படி தெய்வங்கள் அருள்புரிய வேண்டும் என பிரார்த்தித்துக்கொள்கிறேன்” – என்றார். –

Related Posts