Ad Widget

தமிழ் மக்களை பாதுகாக்கின்ற பொறுப்புக்களை இந்தியா மேற்கொள்ளும் என்பதை நாங்கள் நம்புகின்றோம் ; மாவை

இலங்கைத் தமிழ் மக்களையும் அவர்களின் நில உரிமையையும் பாதுகாக்கின்ற கடமையையும் பொறுப்புக்களையும் அயல் நாடான இந்தியா எதிர்காலத்தில் செய்யவேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகவுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சி மகளிர் அணியின் பொங்கல் விழா நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுமையில்,

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள். எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. போர் ஓய்வடைந்துள்ளபோதும் தமிழர்களின் போராட்டம் இன்றும் ஓய்ந்த பாடில்லை ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுமா இல்லையா என்பது தொடர்பில் குழப்ப நிலையே உள்ளது. தமிழில் பாடப்படாது என்றும் கூறப்படுகின்றது.

தந்தை செல்வா காலத்தில் தேசியக் கொடியில் சிறுபான்மை இனங்கள் அடையாளப் படுத்தப்பட வில்லை என்று பல மாநாடுகள் மற்றும் பல இடங்களில் வெளிப்படுத்தி வந்தார். இன்றைய ஆட்சியாளர்கள் ஒற்றைஆட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பதற்கு அப்பால் பெரும்பான்மைத்துவ ஆட்சி தான் இனி நடக்கும் என்பதை பகிரங்கமாகக் கூறிவருகின்றார்கள்.

இத்தகைய நிலையில் எங்களுடைய விடுதலைக்காக கலை கலாச்சாரப் பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காக எங்களை நாங்கள் ஆளவேண்டும் என்பதற்காக பல இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொடுத்துள்ள நிலையிலும் எமது விடுதலையை அடையும் நோக்கத்தோடு எஞ்சியிருக்கும் நாங்கள் பொங்கலை பொங்குகின்றோம்.

தமிழ் மக்களின் கலை கலாச்சாரப் பண்பாடுகளை பாதுகாக்கின்ற கடமைகள் பொறுப்புக்கள் அது மட்டுமன்றி இந்த நாட்டில் நடக்கின்ற பிரச்சினைகள் இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி அயல் நாடான இந்தியாவிற்கும் எச்சரிக்கை விடுக்கின்ற தன்மையை பாதுகாப்பதற்கு பலப்படுத்துவதற்கு இந்தியாவிற்குப் பொறுப்புள்ளது.

அந்தப் பொறுப்பினை எதிர்காலத்தில் எடுப்பார்கள் என்பதை நாங்கள் நம்புகின்றோம். இந்த நாட்டின் தமிழ் மக்களையும் மக்களின் நிலத்தொடர் பாதுகாக்கப்படவும் தங்களைத் தாங்களே ஆளுகின்ற விடுதலை கிடைக்கவும் இந்தியா பங்களிப்புச் செய்யவேண்டும் ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவும் குறிப்பாக சிறைக் கைதிகள் விடுவிக்கவும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவும் மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமரவும் பொறுப்புக் கூறல்கள் இடம்பெறவும் சர்வதேசம் எங்களுக்குத் துணைபுரியும் என்பதை நாங்கள் நம்பியிருக்கின்றோம் என்றார்.

Related Posts