Ad Widget

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஆவா குழு உறுப்பினர் என கைது!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ரீ.ஐ.டி என அழைக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே இந்தக் கைதுகளை மேற்கொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் பொறியியல் பிரிவில் கடமையாற்றும் தமிழ் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான 29 வயதுடைய அன்டனி தாஸீஸியஸ் அரவிந்தன் என்பவரும் ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, சில்லாலை பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கந்தர்மடம் அலுவலகத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். இவர் யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நடைபெற்ற எழுக தமிழ் பேரணியை ஏற்பாடுசெய்ததில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து சென்றுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் நடத்திவரும் விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, வாள்வெட்டு உட்பட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்படுபவர்களை கைதுசெய்து வருகின்றனர்.

இதற்கமைய நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு யாழப்பாணத்திலுள்ள பிரபல விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்த இளைஞரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய கொக்குவில் கெங்காதரன் பிருந்தாபன் வயது 20, திருநெல்வேலிப் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கமல்நாத் ஆகிய இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கந்தர்மடம் அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட 29 வயதுடைய அன்டனி தாஸீஸியஸ் அரவிந்தன் அலையாவார்.

இதேவேளை சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட மூவரில் இருவரை கைதுசெய்யும்போது பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டதுடன் அவர்களை கைதுசெய்தமைக்கான சான்று பத்திரங்களையும் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர்.

எனினும் ஒருவருக்கு கைதுசெய்தமைக்கான சான்று பத்திரம் வழங்கவில்லை. இதனால் குடும்பத்தினர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மூவர் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை உறுதிசெய்தனர்.

எவ்வாறாயினும் நேற்றைய தினமும், இன்று அதிகாலையும் இடம்பெற்றுள்ள கைதுகள் தொடர்பில் இதுவரை தமக்கு எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ரி.ஐ.டி. நடத்திய தேடுதல் வேட்டையில் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்று அதிகாலை மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் ரி.ஐ.டி யினரால் இதுவரை எட்டு பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts