Ad Widget

தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும்: – பத்மினி சிதம்பரநாதன்

தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்ற உறுதிப்பாட்டோடு எமது உரிமைக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் திருமதி பத்மினி சிதம்பரநாதன் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களிற்குக் மேலும் தெரிவித்ததாவது..

இன்று தமிழ் மக்களிடம் நிலவும் நம்பிக்கையீனம் மனச்சோர்வு போன்றவற்றை அகற்றி கூட்டு உறவும், செயலாற்றல் வலிமையும் மிக்கஒரு மக்கள் சமூகத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நேர்மையோடும் உறவுப் பிணைப்போடும் அரசியல் தலைமையும் மக்களும் ஒன்று கூடி ஆற்றும் செயற்பாட்டின் மூலமே இப்பாரிய பணி சாத்தியப்படும்.இந்த வேலையில் மக்களின் முன்னனிப்படையாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நின்று இந்த வேலையை முன்னெடுக்கும். அதற்கான அங்கீகாரத்தையே இத்தேர்தலில் நாம் மக்களிடம் கோருகின்றோம்.

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். தொடர்ச்சியான நிலப்பரப்பு வாழ்விடமும் தனித்துவமான பண்பாடும், மொழிச்சிறப்பும் சுயமான பொருளாதார கட்டமைப்பும் உடையதாக இமது இனம் திகழ்வதால் தமிழினம் சர்வதேச நெறிமுறைகளுக்கமைவாக தேசிய இனம் என்று அழைக்கப்படுகிறது.

அவ்வாறான தேசிய இனம் சுயநிர்ணய உரிமைக்கு உருத்துடைய ஒரு இனம். 2009 இல் தமிழ்ச்சமூகத்தின் பாதுகாப்பு அரண் அழிக்கப்பட்ட பின்பு ஒரு தேசிய இனத்தின் அடிப்படைகளான நிலம்,பண்பாடு, மொழி, பொருளாதாரம் என்பன இன்று அழிக்கப்படுகின்றன. நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது பொருளாதாரம் சூறையாடப்படுகின்றது. பண்பாடு, மொழி சீரழிக்கப்படுகின்றது.

பண்பாடும் மொழியும் சீரழிக்கப்படுவதுஎமது வாழ்வின் அடிப்படையாக விளங்கும் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்து வருகிறது. மது, போதைவஸ்து பாவனை இன்று நினைத்தாலே நடுங்கும் அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது. குடும்பவன்முறை, இளைஞர்களின் பிறழ்வான நடத்தை, பாலியல் துஸ்பிரயோகம் என சமூக வாழ்வு பெரும் ஆபத்தில் சிக்கிக்கிடக்கின்றது.

2006 ற்கு முன் நள்ளிரவிலும் கூட பெண்கள் அச்சமின்றி பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. பயமின்றிய வாழ்வு ஒன்றை நாங்கள் வாழ்ந்தோம். 2009 ற்கு பின் ஒரு பாரிய பண்பாட்டு அதிர்ச்சி ஒன்று எமக்கு ஏற்பட்டது.

உண்மையில் மாறிய ஒரு சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை தீர்மானிப்பதற்கான பண்பாட்டுச்செயற்பாடுகள் எம்மிடையே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் ஆக்கிரமிப்பாளர்களாலும் அவர்களின் முகவர்களான உள்ளுர் அரசியல்வாதிகளாலும் அதற்குரிய வெளி இல்லாமல் செய்யப்பட்டது.

ஆனால் நாம் சோர்ந்திருக்கவில்லை. புலம்பெயர் உறவுகளிடமிருந்து எமக்கு கிடைத்த குறைந்தபட்ச உதவிகளை வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் நாம் ஒரு பண்பாட்டு நிலையத்தை உருவாக்கியுள்ளோம். அப்பண்பாட்டு நிலையத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் பணிகளை நிகழ்த்திவருகிறோம்.

இந்த நிலையத்திற்கு வந்ததன் மூலம் தமது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டவர்கள் இருக்கின்றார்கள். எமது சமூகத்தைச் சீரழிவிலிருந்து மீட்டு மீள உருவாக்கிகொள்வதற்கு இத்தகைய பண்பாட்டு நிலையங்கள் பெரும் பங்கை வகிக்கும்.

எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கக்கூடிய அரசியல் அதிகாரத்தின் மூலமும் வளங்களின் மூலமும் புலம்பெயர் உறவுகளின் உதவிகளின் மூலமும் இத்தகைய பண்பாட்டு நிலையங்களை கிராமங்கள் தோறும் அமைப்பது எமது திட்டமாகும்.

இப்பண்பாட்டு வேலையூடு மக்களிடையே ஒற்றுமையை கட்டிவளர்த்து பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றத்தையும் இளைஞர் யுவதிகளின் தொழிற்துறை முன்னேற்றத்தையும், ஊர் மேம்பாட்டையும் ஏற்படுத்துவது எமது திட்டமாகும். இந்த பணிகளின் வேலையின் மூலம் தமிழச்சமூகத்தின் முன்னுதாரணமான எழுச்சி கிராமங்களை உருவாக்கி அதனை தமிழ் சமூகம் முழுவதிலும் பரவச்செய்ய முடியும். ஒரு எழுச்சி மிக்க தமிழ்ச் சமூகம் பொங்கி எழும்.

இவ்வாறு எழும் பொங்குதமிழர் தமது நியாயமான அபிலாசைகளின் அடிப்படையில் தமது உரிமை கோரிக்கைகளை உறுதியாக முன்னெடுப்பர். எழுச்சியடைந்த மக்களின் பங்களிப்போடு அவர்களின் முன்னணிப் படையான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேரம்பேசலில் ஈடுபடும்.

இன்று உள்ள புவிசார் அரசியலின் படி எமக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது.இன்று சர்வதேசஅரங்கில் இரு துருவ அரசியல் மேலோங்கி வருகின்றது. நாடுகளிடையே ஆதிக்கப்போட்டி நிலவுகிறது.இலங்கையில் தமது நலன்களை பேணுவதற்காக தமிழர்களை நாடி வரும் நிலை தோன்றியிருந்ததை ஜனாதிபதி தேர்தலில் அவதானித்திருப்பீர்கள். ஆனால் அன்று எம்மிடம் உறுதியான நேர்மையான தலைமை இல்லாததால் தமிழ் மக்கள் சார்பாக பேரம் பேசல் நடைபெறவில்லை.

முப்பது வருடங்களாக நடந்த போராட்டத்தினூடாக எமது உரிமைக்கோரிக்கை சர்வதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ் மக்களிடம் உருவாகின்ற போலி அரசியல்வாதிகள் தமது பதவி, சுகபோகங்களை மட்டும் அனுபவிப்பதற்காக மக்களது அபிலாசைகளின் அடிப்படையில் உறுதியான பேரம் பேசலில்ஈடுபடுவதில்லை. இவர்கள் ஆளும் வர்க்கங்களின் முகவர்களாக செயற்பட்டு மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளிவிடுகிறார்கள்.கிடைப்பதை வாங்க வேண்டும் என்ற மனப்பான்மையை மக்களிடம் விதைத்துக்கொண்டு தாங்கள் எந்தவித உரிமை கோரிக்கையையும் முன்வைக்காமல் ஆளும் வர்க்கங்களின் பின்னால் கொடிதூக்கித்திரிகிறார்கள்.

மக்கள் வெறுப்படைந்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும்.

தமிழினம் ஒரு தேசிய இனம் என்ற உறுதிப்பாட்டோடு எமது உரிமைக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்பணியில் தமிழ் மக்களின் முன்னணி படையாகச் செயற்படும். தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இரு தேசம் ஒரு நாடு என்ற இலட்சியம் நோக்கி முன்னணி செயற்படும்.

Related Posts