Ad Widget

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தால் மாத்திரமே சவால்களை முறியடிக்க முடியும்- குகதாஸ்

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியுமென முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சபா.குகதாஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“தமிழ் தலைமைகள் எல்லோரும் ஒன்றுபட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு எவ்வாறு பெற்றெடுத்தார்களோ அவ்வாறு கூட்டாக ஒன்றுபட வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வருகின்ற சவால்களை ஜனநாயக ரீதியில் முறியடிக்கக் கூடியதாகவும் சர்வதேச ரீதியில் நாட்டின் பூகோள நலம் சார்ந்து பங்கெடுத்துக்கொண்டிருக்கும் நாடுகள், தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் அமைய வேண்டும்.

இன்னும் காலம் கடக்கவில்லை. தமிழ் கட்சிகள் அனைத்தும் மனம் விட்டு பேசி தமது போலி கௌரவங்களை விட்டு தமிழ் மக்களுடைய தேசிய நலன் சார்ந்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக வட.கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைக்காக ஜனநாயக வழியில் தங்களுடைய பூரண பங்களிப்பை கொடுத்திருந்தார்கள். அது மாத்திரமின்றி விடுதலைப் போராட்டம் நடைபெற்றபோது பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்து இருக்கின்றார்கள்.

இவ்வாறு ஒரு விலை மதிப்பிட முடியாத போராட்டம் நடைபெற்றது. அந்த தியாகங்கள் பெறுமதியாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts