Ad Widget

தமிழ் இளைஞர்கள் கொலை வழக்கு: 16 இராணுவத்தினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சிறுப்பிட்டி பகுதியில் இரு தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 14 இராணுவத்தினருக்கும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நேற்று யாழ் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,

மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இளைஞர்கள் இருவர் கடந்த 1997ம் ஆண்டு ஒக்டோபர் 28ம் திகதி மயிலங்காட்டு பகுதிக்கு உறவினருடைய திருமணத்துக்காக சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் இருவரும் சிறுப்பிட்டி, புத்தூர் வாதரவத்தையில் அமைந்திருந்த இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் அச்சுவேலி பொலிஸாரால் 1998ம் ஆண்டு காலப்பகுதியில் அந்த இராணுவ முகாமில் கடமையாற்றிய 16 இராணுவ வீரர்களுக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, சுமார் 18 வருடங்களின் பின்னர் சட்டமா அதிபரினால் இவ்விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு மேற்குறித்த இரு இளைஞர்களையும் கொலை செய்ததன் அடிப்படையில், 16 இராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்றுக்கும் அச்சுவேலிப் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts