Ad Widget

தமிழ் இளைஞர்களை யுத்தத்திற்கு இழுக்க இராணுவம் முயற்சி: சுரேஸ்

suresh-peramachchantheranபொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வன்முறைகளைத் தூண்டிவிட்டு வடமாகாண இளைஞர்களை மேலும் ஒரு யுத்தத்திற்குள் இழுப்பதற்கு இராணுவம் முயற்சி செய்து வருகின்றது’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், ‘தேர்தலுக்கு பின்னர் அராலி, கோட்டைக்காடு, மல்லாகம், சுன்னாகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. கச்சாயில் மோட்டார் சைக்கிள் ஒன்றை எரித்தமை, யுத்தம் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக மல்லாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதரவாளர்கள் மீது கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக கூறிவரும் ஜனாதிபதி, இவ்வாறான சம்பவங்களை கவனத்தில் எடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேவேளை, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும், இவ்விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

‘யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் 88 பேருக்கு இடமாற்றம் கொடுக்கப்பட்டமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினை முடக்கும் ஒரு முயற்சியாகும். ஏற்கனவே அங்கு 412 வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில் 322 வைத்தியர்களே அங்கு கடமையாற்றுக்கின்றனர்.

வடமாகாண ஆளுநர் வடமாகாண சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்துள்ளார். வடமாகாண சபையின் வாகனங்களை கொழும்பில் ஆளுநரின் மனைவி, பிள்ளைகள் பாவிக்கின்றதுடன், இராணுவத்தினரும் வடமாகாண சபையின் வாகனங்களை கையாண்டு வருகின்றனர். அத்துடன், வடமாகாண சபையின் நிதி நிலைமையும் மோசமான ஒரு நிலையிலுள்ளது’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts