Ad Widget

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு சட்ட நடவடிக்கை!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு பெரிதாக நன்மை இல்லா விட்டாலும் சில விடயங்கள் ஆறுதல் தருவதாக அமைந்ததாகப் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (11.05.2023) தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற நிலையில், அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சந்திப்பில் வன இலாக்காவினால் கைப்பற்றியுள்ள காணி சம்பந்தமாக ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்ட நிலையில், 1985க்கு பின்னர் வன இலாக்காவினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மக்களின் தேவைகளுக்கு விடுவிக்குமாறு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

இராணுவம் வசமுள்ள தமிழ் மக்களுடைய காணிகளை விடுவிப்பது சிறைகளில் நீண்ட காலமாகத் தடுக்க வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் எஞ்சியோரையும் விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரட்ணம் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதில் அளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பெரும்பாலான தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியோரையும் விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளில் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

பௌத்த மயமாக்கல் தொல்பொருள் திணைக்களம் என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய காணிகள் அபகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

காணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் ஒம்பூஸ்மன் ஒருவரை நியமித்து ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியைக் கேட்டிருந்தேன் நல்ல யோசனை அவ்வாறு செய்வதாகத் தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறுபட்ட பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த சந்திப்பு பெரிதாக நன்மை பயக்காவிட்டாலும் சில விடயங்களில் ஆறுதல் அடையக் கூடியதாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts