Ad Widget

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ்மக்களை அரசு அடிமைகளாகவே கருதுகின்றது – ஐங்கரநேசன்

தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம், அதன் பின்னர் தமிழ் மக்களைத் தான் சொன்னவற்றை மாத்திரம் செய்யவேண்டிய அடிமைகளாகவே கருதுகிறது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சுழிபுரம் பாரதி கலைமன்றத்தின் 32வது ஆண்டுவிழாவும் கலையரங்கு திறப்புவிழாவும் கடந்த சனிக்கிழமை (24.05.2014) சுழிபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில் மேலும்,

விடுதலைக் கவிஞனான பாரதியின் ‘வெள்ளை நிறத்திலொரு பூனை’ என்ற பாடலை ஒரு சிறுவன் இங்கு திறம்படப் பாடிக் காட்டியுள்ளார்.’வெள்ளை நிறத்திலொரு பூனை வீட்டில் வளருது கண்டீர். பிள்ளைகள் பெற்றது அப்பூனை அவை பேருக்கு ஒரு நிறமாகும். சாம்பல் நிறமொரு குட்டி, கருஞ்சாந்தின் நிறமொரு குட்டி. பாம்பின் நிறமொரு குட்டி, வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி. எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரு தரமன்றோ, இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றமென்றும் சொல்லலாமோ?’ என்று பாரதி தனது பாடலில் வலியுறுத்தியிருப்பது பல்வகைமை எனப்படும் பல்லினத்துவத்தை.

உலகில் உயிர்களின் இருப்புக்கு இப்பல்வகைமை அத்தியாவசியமானது என்பதுதான் உயிரியல் நியதி. இனப்பல்வகைமை, மொழிப்பல்வகைமை, பண்பாட்டுப்பல்வகைமை என்று எல்லாப் பல்வகைமைகளுமே இன்றியமையாதவை. ஆனால், இலங்கை அரசு இனப்பல்வகைமையை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை. சகல இனங்களையும் சமத்துவமாக ஏற்றுக்கொள்ளாமல், சிங்கள மேலாதிக்கச் சிந்தனையுடனேயே தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசாங்கம் போரில் இறந்த எங்களின் உறவுகளுக்கு எங்களை அஞ்சலி செய்யவிடாமல் தடுத்து, அஞ்சலிச் சுடர்களைக் காவல்துறையினரின் சப்பாத்துக் கால்களால் மிதித்து அணைக்கும் காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், தான் வெற்றி விழாவைக் கொண்டாடுகிறது. எங்களது ஆலயங்களில் திருவிழாக்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, பௌத்தமதப் பண்பாடு கடைப்பிடிக்கப்படாத வடக்கில் வெசாக் தினத்தைக் களியாட்ட விழாவைப் போலக் கொண்டாடுகிறது.

போருக்குப் பிறகு தமிழ்மக்களை அடிமைகளாகக் கருதியே அரசு இத்தகைய அடக்குமுறைகளை எங்கள் மீது மேற்கொண்டுவருகிறது. கைகளில் ஆயுதங்கள் இல்லை என்பதற்காக அடக்குமுறைகளை எதிர்த்து நாம் போராடாமல் இருக்க முடியாது. ஆனால், ஜனநாயக ரீதியாகப் போராட முற்படுபவர்களையும் பயங்கரவாதத்துக்குத் துணைபோவதாகச் சொல்லிக் கைது செய்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மே-18 அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்கிறார் என்பதற்காகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் விசாரணைக்கென நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று மீள்குடியேற்றத்தை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி, அரசாங்கம் இனப்பல்வகைமையை, இனச்சமத்துவத்தை நிராகரித்துச் சிங்கள மேலாதிக்கச் சிந்தனையோடு தொடர்ந்தும் தொழிற்படுமாக இருந்தால் இலங்கைத்தீவில் ஒருபோதும் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.

இது மேன்மேலும் இனங்களுக்கிடையிலான பகைமையை வளர்த்துச் சென்று அழிவுகளுக்கே வழிகோலும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.வேல்நம்பி, பேராசிரியர் நாச்சியார் செல்வநாயகம், காரைநகர் பிரதேசச் செயலர் பா.தேவந்தினி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

02

03

05

06

07

08

09

Ainkara-nesan

Related Posts