Ad Widget

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகைமாத விழா சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி ஆரம்பமானது

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத விழா கடந்த சனிக்கிழமை (18.011.2017) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி நடைபெற்றுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக மாகாண விவசாய அமைச்சாலும் பொது அமைப்புகளாலும் பொதுமக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் சங்கிலியன் பூங்காவில் மலர்க் கண்காட்சியுடன் கூடிய மரநடுகை விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன், ஆளுநரின் செயலர் இ. இளங்கோவன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோரின் சிறப்புரைகளுடன் நீர்வையூர் பொன்சக்தி கலாகேந்திரா மாணவிகளின் மரநடுகைப் பாடல் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.

ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள இந்நிகழ்ச்சியில் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், இ.ஜெயசேகரம், வ. கமலேஸ்வரன், யாழ் மாநகரசபை ஆணையாளர் த. ஜெயசீலன், கூட்டுறவு ஆணையாளர் பொ. வாகீசன் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தார்கள். பங்கேற்ற விருந்தினர்களுக்குக் கார்த்திகைப் பூச்சூடி வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கின் தாவர உற்பத்தியாளர்கள் பலர் தங்கள் உற்பத்திகளைக் காட்சிப்படுத்தியுள்ள மலர்க் கண்காட்சி எதிர்வரும் 24ஆம் திகதி வரை தினமும் காலை 8மணியில் இருந்து இரவு 9மணிவரை நடைபெறும் எனவும், கண்காட்சியைப் பார்வையிட வருகின்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts