Ad Widget

தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! – ஜனாதிபதி

புலிப் பயங்கரவாதம் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டபோதும் இந்த நாட்டில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான அவர்களது சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்த ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்தப் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்போது, நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுவிழக்கச் செய்து இராணுவ வீரர்களை பலவீனமடையச் செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின்போது குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டவர்களின் குற்றச்சாட்டுக்களை அரசு வன்மையாக நிராகரிப்பதாகவும் கூறினார்.

அத்திடிய மிஹிந்து செத் மெதுறவில் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் –

இராணுவத்தினர் தாம் பிறந்த நாட்டுக்காக மேற்கொண்ட சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக 15 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடன் இந்த நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு ஒருபோதும் தேசிய பாதுகாப்புக்காக தனது பொறுப்பைப் புறந்தள்ளுவதற்கோ, தாமதப்படுத்துவதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனை முன்னரிலும் பார்க்க மிகவும் வலுவான முறையில் நடைமுறைப்படுத்துவது எமது நோக்கமாக உள்ளது.

நாட்டுக்கு வெளியே உள்ள புலிப் பயங்கரவாதிகள் காணும் ஈழநாடு தொடர்பான கனவை உடைத்தெறிவதற்கு சர்வதேசத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களும் இன்று இலங்கைக்குக் கிடைத்துள்ளன. தாய்நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமைப்பாட்தடுக்கு சவால் விடுக்கும் நாட்டுக்கு வெளியில் இருந்து செயற்படும் சகலவிதமான செயற்பாடுகளையும் இல்லாதொழிப்பதற்கு புதிய அரசு பாடுபடுகின்றது.

யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் சில சம்பவங்கள் காரணமாக இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சந்தர்ப்பங்கள், தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றை பெரும்பாலான உலக நாடுகள் நிறுத்தியிருந்தன. இருப்பினும், நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அந்நாட்டு அரச தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வாய்ப்புக்கள் மீண்டும் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்குக் கிடைத்துள்ளன.

இந்நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதைத் தவிர்த்து நாட்டில் நிலையான சமாதானத்தை நிலவச் செய்வதே அன்று யுத்த களத்தில் உயிரைத் தியாகம் செய்த, உடல் உறுப்புக்களை இழந்த அனைத்து இராணுவத்தினருக்காகவும் அரசினால் வழங்கப்படும் அதி உயர்ந்த பாராட்டாகும் – என்று தெரிவித்தார்.

இதன்போது இராணுவத்தினருக்காக காணி உறுதிகள், பகுதியளவு பூர்த்தியடைந்த வீட்டு உரிமைப்பத்திரங்கள் ஆகியவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts