Ad Widget

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல – டக்ளஸ்

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்லவென கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்ச்ர டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவே அமைச்சரவையில் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில்நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அக்கிராசன உரை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குறிப்பிடத்தக்களவு வாக்குகளை வழங்கவில்லை. எனினும் ஜனாதிபதி தன்னுடைய பதவியேற்வு நிகழ்வில் தெரிவித்ததைப் போன்று தமிழ் மக்கள் உட்பட நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதி என்ற வகையில் தமிழ் மக்களுக்கு வழங்கியிருக்கும் அங்கீகாரமாகவே தன்னுடைய அமைச்சுப் பதவி பலராலும் கருதப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேர்தல் முடிவுகள் வெளியான மறுகணத்தில் இருந்தே தமிழ் மக்கள் தாம் விட்ட தவறுகளை எண்ணி எம்முடன் மனம் விட்டுப் பேசி வருந்தத் தொடங்கி விட்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்களின் இத்தகைய மனமாற்றங்கள் கடந்த காலங்களைப் போலன்றி நிரந்தரமானதாக நீடிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இனிவரும் காலங்களில் மக்கள் தமது ஆதரவை யானைக்கு வழங்காமல் தான் கேட்கும் ஆணைக்கு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் அதுவரை காத்திருக்காது கிடைத்திருக்கும் அதிகாரத்தினை பயன்படுத்தி தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் பிரச்சினைகளையும் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்காலத்தில் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்பது தொடர்பாக வெளியாகும் செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், ஒரு சிலரினால் வெளியிடப்பட்ட கருத்துக்களாக அவை இருக்கலாமே தவிர, அரசாங்கத்தினால் அவ்வாறான தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், சுயலாப தமிழ் கட்சிகளின் தவறான வழி நடத்தலை எண்ணி தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் வஞ்சித்து விடாது என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related Posts