Ad Widget

தமிழின அழிப்பின் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்காக முள்ளிவாய்க்காலிலும், வாகரையிலும் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் அனைத்து மக்களையும் பங்குகொள்ளுமாறும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்த அழைப்புச் செய்தியில்..

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 07ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பி.ப 4.00 மணிக்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் மு.ப 10.00 மணிக்கும் மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இன அழிப்பு ஒன்றின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளான மே 18 என்பது தமிழரது சரித்திரத்தில் மறக்க முடியாத கறைபடிந்த நாளாகும். அந்நாள் தமிழினம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனவழிப்பு தினமாகும்.

தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்கான உரிமை எமக்குள்ளது. இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியான வழியில் அனைவரையும் கடைப்பிடிக்குமாறு கோருவதுடன், முள்ளிவாய்க்காலிலும், வாகரையிலும் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுமாறும் அழைக்கின்றோம்.

இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts