Ad Widget

தமிழினத்தின் இருப்பை காப்பாற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் தமிழ் மக்கள் கைகோர்க்க வேண்டும் – சிவபாதம் கஜேந்திரகுமார்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் வன்னியில் வேட்புமனுவை கையளித்தனர்.
இதில் வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் எஸ்.என்.ஜீ.நாதன், சிவரதி ராஜ்குமார், வீ.திகாஸ் விக்னேஸ்வரன், இந்திராணி விவேகானந்தன், செ.பாலசுப்பிரமணியம், க.பார்த்தீபன், ப.ஜனன், முன்னாள் போராளியான இ.பிரபாகரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ;-
தமிழினத்தின் இருப்பை காப்பாற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் தமிழ் மக்கள் கைகோர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி தொகுதி முதன்மை வேட்பாளர் சிவபாதம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான தேர்தல். திட்டமிட்ட குடியேற்றம், நில அபகரிப்பு என நாளாந்தம் வடக்கு, கிழக்கு பகுதியில் தமிழர் தேசத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்கள் மீள இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத அளவு பல்வேறு துன்பங்களை சுமந்து வருகின்றனர். இவை அனைத்தும் எம் கண்முன்னே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

கடந்த 60 வருட காலத்தில் இந்த மண்ணைக் காப்பாற்ற நாம் இழந்தவை அதிகமானவை. அவற்றை அர்த்தமுள்ளதாக்கவும் அந்த ஆத்மாக்களின் கனவினை நனவாக்க வேண்டியதும் ஆன பெரும் பொறுப்பு இறந்த எமது உறவுகளின் உடல்கள் புதைந்த மண்ணிலே தினமும் நடக்கும் எமக்கே உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூர நோக்கற்ற செயற்பாடு அரசின் திட்டமிட்ட அழிப்புக்கு துணை போகின்றது. இதனை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எமது மண்ணையும் எமது அடையாளங்களையும் பாதுகாத்து எமது மக்களின் சுபீட்சமான வாழ்க்கைக்கும் இந்த சிங்கள தேசத்தில் தமிழர் சம உரிமைகளுடன் ஒரு நாட்டுக்குள் இரு தேசங்களாக வாழ்வதற்கும் வழியேற்படுத்தப்பட வேண்டும். அதனை ஏற்படுத்த இலட்சித்திற்காக கடந்த 5 வருடங்களாக அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பணியாற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை பலப்படுத்து கைகோருங்கள் என தமிழ் மக்களை அன்புடன் அழைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

Related Posts