இணக்கமும் கூட்டுமுயற்சியும் இருந்தால் தான் எமது இனத்துக்கான எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன், சனிக்கிழமை (13) தெரிவித்தார்.
ஊர்காவற்றுறை தொகுதிக்கான இளைஞர் மற்றும் மாதர் அணி அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்தகால தவறுகளை எண்ணிக்கொண்டிருப்பதாலும் பழிவாங்கும் எண்ணங்களை கொண்டிருப்பதாலும் எமது சமூக வளர்ச்சியும் எமக்கான தீர்வுகளும் ஒருபோதும் கிடைத்துவிட போவதில்லை.
எமது தேவைகளை எதுவானாலும் மத்தியில் ஆட்சி செய்பவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தி கொள்வதன் மூலம் தான் பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் உயிரை முதலீடாக வைத்து நடத்திய ஆயுதப்போராட்டம் அறிவாயுதம் என்னும் பலம் இன்மையால் ஒட்டுமொத்தமாகவும் அழிக்கப்பட்டுவிட்டது. தமிழர்களிடமிருந்த அசுரபலம் கொண்ட ஆயுத பலத்தால் எட்டமுடியாத இலக்கை, வெற்றுப்பேச்சுக்களால் பெற்றுக்கொள்ள முடியுமா? என்பது சந்தேகமே.
இணக்கமும் கூட்டுமுயற்சியும் இருந்தால்தான் இனிவரும் காலங்களில் எமது இனத்துக்கான எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும். இதுவே நடைமுறைக்கு சாத்தியமான வழி ஆகும் என்றார்.