Ad Widget

தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு: சம்பந்தர் விளக்கம்

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அவ்விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்காலம், புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக சுதந்திர தின விழாவில் பங்கேற்பது என்று முடிவெடுத்ததாக அவர் கூறுகிறார்.

அதேவேளை கூட்டமைப்புக்குளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், எனினும் இது தொடர்பில் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார்.முந்தைய ஆட்சிபோல் அல்லாமல், இந்த ஆண்டின் சுதந்திர தின வைபவம், இராணுவ வெற்றியை மையப்படுத்தவில்லை என்றும், அப்படியான சூழலில் இந்த நிகழ்வில் பங்குபெறுவது நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை அனுப்பும் என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும் வகையிலும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்கிற அடிப்படையிலேயே இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்ததன எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Related Posts