Ad Widget

தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி தாய் ஒருவர் விசப் போத்தலுடன் போராட்டம்

தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டார்.

குறித்த பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் சரியான முடிவு வழங்கப்படும் என மாவட்ட செயலக அதிகாரியால் உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வவுனியா தோணிக்கல் சேக்கிழார் வீதியில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்னர் வசித்து வந்த குடும்பம் ஒன்று நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றிருந்தது.

அதன்பின் அவர்களது காணியில் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் பிறிதொரு குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.

அவர்களால் குறித்த காணியில் பிறிதொரு வீடு கட்டப்பட்டுள்ளது. தற்போது கிளிநொச்சியை சேர்ந்த குடும்பம் தமது சொந்த இடத்திற்குச் சென்ற நிலையில் தமது உறவினர் எனக் கூறி ஒரு குடும்பத்தை குறித்த காணியில் குடியேற்றியுள்ளார்.

இந்நிலையில் இடம்பெயர்ந்து இந்தியா சென்ற காணி உரிமையாளரும் அவரது மகனும் கடந்த 23 ஆம் திகதி வவுனியாவிற்கு வந்த நிலையில் தமது காணிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த காணியில் வசிப்பவர்கள் அது தமது காணி எனவும் அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி அவர்களது காணியையும் அவர்களது வீட்டையும் கொடுக்க மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமது காணியை மீட்டுத் தருமாறு கோரி காணி உரிமையாளர் விஷப் போத்தலுடன் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைடுத்து அங்கு வந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து விச போத்தலைப் பெற்றுக் கொண்டதுடன் இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர், அரச அதிபர் ஆகியோருடன் பேசி தீர்வைத் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை காணி உரிமையாளர் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது குறித்த தாயையும் அவரது உறவினர்களையும் அழைத்து கலந்துரையாடிய மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோர் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவை அழைத்து குறித்த காணி ஏன் உரியவர்களிடம் ஒப்படைக்கபடவில்லை என்பது பற்றி கலந்துரையாடினர்.

இதனையடுத்து மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஒருவரை குறித்த காணிக்கு அனுப்பி அதன் உண்மை நிலை தொடர்பாக அறியத்தரும்படி மாவட்ட அரச அதிபர் தெரிவித்திருந்தார். இதனைடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Related Posts