வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினரால் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரைக் கைது செய்யும் நோக்குடன் குறித்த பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணி தொடக்கம் இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
நேற்று தைப்பொங்கல் தினத்தன்று பிற்பகல் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டார்.
வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை குறித்த இராணுவச் சிப்பாய் கண்டித்துள்ளார். இதன்போது அந்நபரின் உறவினர்கள் அங்கு கூடி குறித்த இராணுவச் சிப்பாயுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொண்டரை கைது செய்யும் நோக்குடன் அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
நாகர்கோவில் பகுதியிலிருந்து எவரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து எவரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரில் பிரதான சந்தேகநபரை தொடர்ந்தும் தேடி வருவதாக குறிப்பிட்டனர்.
இந்நிலையில், பிரதான சந்தேகநபரை கைது செய்யும் நோக்குடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.