Ad Widget

தனிமைப்படுத்தல் கட்டளையை மீளாய்வு செய்யுமாறு முன்னணியினர் நகர்த்தல் பத்திரம் அணைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த நீதிமன்றம் கட்டளையிட்டது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து , மன்றிடம் விண்ணப்பம் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல் நேற்றைய தினம் கட்டளையிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் , செயலாளர் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ , தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதிவான் , 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச மருத்துவ அதிகாரிகளுக்கு நீதிவான் கட்டளையிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கை மீள அழைக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைக்கப்பட்டு மன்றிடம் விண்ணப்பம் விடுத்துள்ளனர்.

Related Posts