நாச்சிக்குடாக் கடற்கரையில் பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது, நேற்றுப் புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நாச்சிக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற இவ்வாள் வெட்டுச் சம்பவத்தில், குமுழமுனை வீதி நாச்சிக்குடாப் பகுதியினைச் சேர்ந்த மீராசஜித் ஜனாப் (வயது 57) மற்றும் ஜனாப் சரீப் (வயது 31) ஆகிய இருவருமே தலையிலும் காலிலும் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்றொழிலில் தந்தை ஈடுபட்டு வரும் அதேநேரம், மகன் மண்ணெண்ணைக் கடை நடத்தி வருகின்றார்.
செவ்வாய்க்கிழமை (15) கடைக்கு வந்த இளைஞன் ஒருவர் பணத்தினைத் திருடுவதற்கு முற்பட்ட சமயம் அவரைப் பிடித்த கடை உரிமையாளர், பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே வாள்வெட்டுக்குக் காரணம் எனத் தெரியவருகின்றது.
தந்தை தொழில் மேற்கொண்டு விட்டு கரை திரும்பியபோதே, கரையில் காத்திருந்த ஏழு பேர் கொண்ட குழு, இவ் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், கடையில் நின்ற மகன் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.