Ad Widget

தடை தகர்த்து விளக்கேற்றி மாவீரர்களை அஞ்சலிப்போம்! – தமிழ்க் கூட்டமைப்பு சூளுரை

“தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

TNA-logo

“தமிழர் பிரச்சினையை உலக அரங்கிற்கு கொண்டுசென்றவர்கள் மாவீரர்கள். எனவே, எத்தடைவரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து இந்தத் தியாகிகளை நாம் நவம்பர் 27ஆம் திகதி அமைதியான வழியில் நினைவுகூர்ந்து – விளக்கேற்றி அஞ்சலிப்போம்” என்றும் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது.

மண் மீட்புப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் நாளை 27ஆம் திகதி வியாழக்கிழமை உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இந்தத் தினத்தை இலங்கையில் எந்தவொரு இடத்திலும் நினைவுகூர்வதற்கு விடமாட்டோம் என்று இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.

“விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு. மாவீரர் என்ற பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ, தீவிரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கு – பகிரங்கமாக நினைவுகூருவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய நிகழ்வுகளை நாம் தடுத்துநிறுத்துவோம்” என்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேலும் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இந்தத் தடை உத்தரவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

செல்வம் அடைக்கலநாதன்

“தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பாரிய மனித உரிமை மீறலாகும். தமிழரின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த உத்தம தியாகிகளை தீவிரவாதிகள் – பயங்கரவாதிகள் என்று அரசும் அதன் படைகளும் முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எத்தடைவரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த எமது உறவுகளுக்குத் தமிழர்களாகிய நாம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவோம்” – என்று தெரிவித்தார்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

பா.அரியநேத்திரன்

“தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்து தமிழர் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி – தமது இன்னுயிர்களைத் தாயக மண்ணுக்காக அர்ப்பணித்து தமிழர் பிரச்சினையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர்கள் மாவீரர்கள். எனவே, இந்தத் தியாகிகளை நாம் நவம்பர் 27ஆம் திகதி நினைவு கூர்ந்து விளக்கேற்றி அஞ்சலிப்போம்.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் நல்லாட்சியை ஏற்படுத்த அயராது போராடி தமது உயிர்களைத் துறந்த இந்த வீரமறவர்களை அவர்களின் உறவுகள் அமைதியான வழி யில் நினைவுகூருவதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையடுத்து இவ்வாறான நிகழ்வுக்கு அரச படைகள் தடை விதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு” – என்று தெரி வித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன்.

Related Posts