Ad Widget

தடைக்கான விளக்கமும் நியாயம் பெறுவதற்கான வழிமுறையும் – ருவன் வணிகசூரிய

army-ruwan-vanikasooreyaதடை செய்யப்பட்டுள்ள பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் தாங்கள் நிரபராதி என கருதும் பட்சத்தில் சட்ட திட்டத்திற்கமைய உச்ச நீதிமன்றத்திற்கூடாக தமது நியாயங்களை நிரூபிப்பதன் மூலம் பட்டியலிலிருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே பேச்சாளர் பிரிகேடியர் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்பு களுக்கும் 424 உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்தின் திடீர் முடிவு அல்ல. 2008 ம் ஆண்டு முதல் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பற்றி சேகரித்த தகவல்களின் பிரகாரமே வெளியிடப்பட்டுள்ளது

பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய மற்றும் உதவிய அமைப்புக்கள் மற்றும் நபர்களை தடை செய்துள்ளமையானது இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடல்ல. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கையாகும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 இன் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கம் இத்தீர்மானத்தினை எடுத்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபை சாசனத்தில் இத்தீர்மானம் உள்வாங்கப்பட்டது முதலே நாம் இது தொடர்பில் செயற்பட ஆரம்பித்து விட்டோம். மத்திய வங்கியின் உதவியுடன் கட்டம் கட்டமாக இது தொடர்பிலான தகவல் திரட்டப்பட்டன. அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தகவல்களில் பாரிய முன்னேற்றத்தினைக் காணக்கூடியதாகவிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி வெளியான இலக்கம் 1760 – 40 என்ற வர்த்தமானி அறிவித்தலில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் உதவுபவர்கள் அல்லது அமைப்புக்களை தடை செய்வது மற்றும் அவர்களுக்குரிய சொத்துக் களைபறிமுதல் செய்வது தொடர்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரங்களின்று அமைப்புக்களையோ அல்லது தனிநபர்களையோ பயங்கரவாதச் செயற்பாட்டுடன் தொடர்புடையவையென எம்மால் குற்றம் சுமத்த முடியாது. எனவே தான் தீர ஆராய்ந்த பின்னர் பெயர் விவரங்களை வெளியிட்டுள்ளோம் என்றார்.

பட்டியலில் இடம் பிடித்தவர்கள் உயிரிழந்திருந்தாலும் வெளிநாடுகளில் வசித்தாலும் இலங்கையிலுள்ள அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது உறுதி எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

போர்குற்றம் புரிந்தவர்களின் பெயர்களை வெளியிடவுள்ளது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

424 பேர் இலங்கைக்குள் நுழையத் தடை

Related Posts