Ad Widget

டில்லி மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்

டில்லியில் ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாணவி சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழிந்துள்ளார்.கடந்த 13 நாட்களாக மரணத்துடன் கடுமையாக போராடி வந்த மேற்படி மாணவி, இன்று அதிகாலை 2.15 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மாணவியின் மரணம் குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

‘கடைசி வரை அந்தப் பெண் மிகவும் தைரியத்தோடு உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் அவரது மூளை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புகள் அவரது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அமைந்து விட்டது. அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது. எட்டு சிறப்பு மருத்துவர்கள் அந்த மாணவியைக் காப்பாற்ற கடுமையாக போராடினர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் கடந்த 2 நாட்களாக அவரது உடல் நிலை மோசமாகி வந்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின’.

டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவருக்கு ஏற்கனவே மூன்று பெரிய அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருமுறை மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே அவர் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த டிசெம்பர் 16ஆம் திகதி இப்பெண் தனது நண்பருடன் பஸ்சில் பயணித்தபோது ஒரு கும்பல் அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குடுபடுத்தியதுடன் கொடூரமாக தாக்குதலையும் மேற்கொண்டது. இப்பெண்ணுடன் சேர்த்து அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் அப்பெண்ணையும், நண்பரையும் ஒரு பாலத்தில் தூக்கி வீசி விட்டு அக்கும்பல் தப்பி சென்றுவிட்டது.

மேற்படி மாணவி நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று கோரி இந்தியா முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களும், பிரார்த்தனைகளும் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் மேற்படி மாணவி உயிரிழந்துள்ளார்.

Related Posts