Ad Widget

ஜோதிகா வேண்டுகோள், சூர்யா ஏற்பாரா?

36 வயதினிலே படத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவர உள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய ஜோதிகா “பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஒரு படத்தில் நாயகனுக்கு 4 நாயகிகள் வைக்காதீர்கள், நாயகன் பின்னால் நாயகி சென்று ஐ லவ் யூ சொல்வது போன்ற காட்சிகளை நிறுத்துங்கள்,” என திரைப்பட இயக்குனர்களுக்கு பல கோரிக்கைகளை வைத்தார்.

ஜோதிகாவின் பேச்சு நேற்றை சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. தான் பேசப்பட வேண்டும் என்பதற்காக ஜோதிகா அப்படி பேசியருப்பாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் மீடியாக்களுக்கும், சோஷியல் மீடியாக்களுக்கும் ஜோதிகாவின் பேச்சுதான் தற்போது வரை டைம் பாஸ் செய்து கொண்டிருக்கிறது.

சூர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த சி 3 படத்தில் ஜோதிகா கோரிக்கை வைத்த அனைத்து விஷயங்களுமே உள்ளன. படத்தில், அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் என்று இரண்டு கதாநாயகிகள். சூர்யா பின்னால் ஸ்ருதிஹாசன் சென்று ஐ லவ் யூ கூடச் சொல்வார். ஸ்ருதிஹாசனின் ஆடைகள் கூட படத்தில் கிளாமராகவே இருந்தன.

மற்ற இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் ஜோதிகா கோரிக்கை வைப்பதற்கு முன்பாக அதை தன் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கலாமே என்கின்றனர். சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் முதலில் ஜோதிகா சொல்வதை ஃபாலோ செய்து மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கட்டும் என்கின்றனர் சமூக வலைத்தளவாதிகள்.

நேற்றைய நிகழ்ச்சியில் சூர்யா பேசும் போதும் அடுத்தடுத்த படங்களில் எப்படி சரி செய்து கொள்ள முடியுமோ அப்படி சரி செய்து கொள்கிறேன் என்றார். எப்படி சரி செய்து கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts