ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதியளிக்காவிட்டால் பதவி துறக்கப் போவதாக அக்கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரித்துள்ளார்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை என அறிவித்துள்ளது.
வட மாகாணசபை சார்பாக உறுப்பினர்கள் ஜெனிவா கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதெனவும், தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் அங்கு செல்ல முடியும் என்றும் வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனீவாவுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அனந்தி சசிதரன்,
வடக்கு மாகாணசபை அவைத் தலைவரின் இந்த கருத்து மன வேதனை அளிக்கின்றது. நான் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் சமூக ஆர்வலராகவுமே ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ள செல்கின்றேன்.
ஜெனீவா அமர்விற்கு செல்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாட்டை கட்சியின் உயர்பீடம் அறிவிக்க வேண்டும். எனினும் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்வதற்கான அனுமதியை கட்சியின் தலைமைப்பீடம் மறுத்தால் பதவியை இராஜினாமா செய்வேன் என்றும் கூறினார்.