Ad Widget

ஜூன் முதலாம் திகதி தொடக்கம் யாழ்பாணத்தில் பொதுச் சந்தைத் தொகுதிகள் திறப்பு!!

எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளன என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய நிலமைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுச் சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாகாண ஆளுநரும் சில பணிப்புரைகளையும் அறிவுறுத்தல்களையும் விடுத்திருக்கின்றார்.

அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற உள்ளூராட்சி சபைகளின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அதன்
அடிப்படையில் தங்களுடைய சந்தை தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அவற்றை மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அதாவது ஜூன் முதலாம் திகதிக்கு பிற்பாடு சாத்தியமாகும். அதே நேரத்தில் சுகாதாதார ஒழுங்கு விதிகளை வியாபாரிகளும் அங்கு செல்லும் பொது மக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

சில விடயங்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையினருக்கும் கூறியிருக்கின்றோம். அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சந்தைகள் யாவும் வழமை போன்று மக்களுக்கு சேவையாற்ற திறக்கப்படவுள்ளன. அத்தோடு பொதுமக்கள் சுகாதார நடைமுறையினையும் சமூக இடைவெளியினையும் பின்பற்றி சந்தையினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் நான் கோரிக்கை விடுகின்றேன் – என்றார்.

Related Posts