2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் உடனடியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வென்றால், மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை 2015ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி செய்துகொள்வார்.
சில குழுவினர் கூறுவது போல இரண்டாவது பதவிக்காலத்துக்கான 6 வருடங்கள் முடிந்த பின்னர் அல்ல என அரசாங்கம் நேற்று புதன்கிழமை கூறியது.
ஜனாதிபதி ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் பதவியேற்கக்கூடாது. அவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்ற தினமான நவம்பர் 19இலே தான் பதவியேற்பார் என அமைச்சர் டிலான் பெரேரா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
ஜனவரி 8இல் மைத்திரிபால வெற்றி பெற்றால், என்ன நடக்குமென ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கும் தலைவர்’ என அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் பதவிக்காலம் தொடர்பில் பிரச்சினை எழுந்தபோது இந்த விடயத்தில் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பைக் கொடுத்துள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் வழங்கிய தீர்ப்பு பிரயோகிக்கப்படும் என அவர் கூறினார்.