Ad Widget

ஜனாதிபதி ஆணைக்குழுவை கலைக்க வேண்டும் – த.தே.கூ

SURESH‘காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்திருப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கம் காணாமற்போனவர்களுக்கு அரசாங்கம் மரணச்சான்றிதழ் வழங்குகின்றது. அப்படியென்றால், ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாகக் கலைத்து தன் உண்மையான தோற்றத்தை சர்வதேசத்திற்கு அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன், ‘ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மேற்கொண்டிருந்த போது, அவ்விடத்திற்கு அருகில் காணாமற்போனவர்களுக்கான மரணச்சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது’ என்று குற்றஞ்சாட்டினார்.

‘காணாமற்போனவர்கள் தொடர்பாக கண்டறிவதற்கென ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த திங்களன்று கிளிநொச்சியில் மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் அதற்கு அருகில் காணாமற்போனவர்களை அழைத்து மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது’ என்று அவர் குறிப்பிட்டார்.

‘மரணச்சான்றிதழ் வழங்குவதற்கு பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு யார் அதிகாரமளித்தது? ஒருவர் காணாமற்போனால் அவர் இறந்துவிட்டார் என்பதை அவரது உறவினர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் இறப்பு பதிவாளர் அல்லது கிராம அலுவலர் ஊடாகவே மரணச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்’ என்று சுரேஸ் எம்.பி சுட்டிக்காட்டினார்.

‘ஆனால், இங்கே மக்களை வலிந்து அழைத்து வந்து அச்சுறுத்தி மரணச்சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. எனவே இது முற்றிலும் சட்டத்திற்கு முரணான விடயமாகும். மேலும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமற்போனவர்களுக்கும் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்றால் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் நாங்கள் அவர்களை படுகொலை செய்துவிட்டோம் என்பதினை’ என்றார்.

‘இவ்வாறு மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஆணைக்குழு தலையிட்டு அதனை நிறுத்தவேண்டும். அல்லாது போனால் இதன் உண்மையான நிலைமையினை நாம் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவோம்’ என சுரேஸ் மேலும் தெரிவித்தார்.

Related Posts