ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 67 ஆவது பிறந்த தினத்தை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடுகின்றார்.

இந்தவகையில் ஜனாதிபதியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு நாடளாவிய ரீதியில் பல சமய வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அரசியலில் 1989 ஆம் ஆண்டு நுழைந்த மைத்திரிபால சிறிசேன, இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் பொலநறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வாண்டே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இவர் 1994 முதல் 2014 நவம்பர் காலப்பகுதியில் இலங்கை அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு, இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.