Ad Widget

சொந்த பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பினர் அரசின் பின் கதவை தட்டுகின்றனர் – டக்ளஸ்

daklasதமது சொந்த சலுகைகளை பெறுவதற்காக அரசின் பின் கதவு தட்டி, இணக்கமாக பேசி வெற்றி பெறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் பிரச்சினைகளையும் அதே வழிமுறையில் பெறுவதற்கு ஏன் முன்வருவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் அவர்கள் வட பகுதி மக்களின் நிலங்களை மக்களுக்கு கையளிக்கும் முகமாக படைத் தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றார். இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்பது வெறுமனே ஓர் அரசியல் கோசம் அல்ல. தேர்தல் காலத்தில் மட்டும் கோசம் எழுப்பி விட்டு, தேர்தல் முடிந்தவுடன் காற்றோடு பறந்து போகும் தேர்தல் கால வாக்குறுதியும் அல்ல. எமது மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்றும், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த எமது மக்களின் நிலங்களை
எமது ஆக்கபூர்வ இணக்க அரசியல் வழிமுறை மூலம் அரசுடனும் படைத் தரப்புடனும் பேசி நாமே தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எம்மை பொறுத்த வரையில் இது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய வாழ்வியல் உரிமைச் சொத்து. எமது நிலங்களை எமது மக்கள் மீளப்பெறுவதற்கு வெற்று வீரப் பேச்சுக்கள் ஒரு போதும் உதவப் போவதில்லை. போலியான வீரப் பேச்சுக்கள் ஒரு சாண் நிலத்தை கூட எமது மக்களுக்கு பெற்றுத்தரப் போவதில்லை. இந்த உண்மையே இங்கு வெளிப்படையாகி வருகின்றது.

பிறந்திருக்கும் அரியதொரு சூழலையும் பாழடித்து கடந்த காலங்களைப் போல் வெறும் பகமைகளை வளர்த்து எமது மக்களை அடுத்தவர் வீட்டு கொல்லைப் புறங்களிலும் இரவல் நிலங்களிலும் தொடர்ந்தும் தவிக்க வைக்கும் இருண்ட யுகத்தையே வெற்று வீர அறிக்கைகள் இங்கு பெற்றுத்தரும் என்பது உண்மையாகி விட்டது.

எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்கள் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விருப்பமுடன் அதை முன்னெடுத்தால் நாம் வரவேற்போம். மாறாக, வெறுமனே எதிர்ப்பு கோசம் எழுப்பி எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீராப் பிரச்சினையாக நீடிக்கவைத்து மக்களின் அவலங்களை காட்டி சுயலாப அரசியல் நடத்துவதை வெறுக்கின்றோம்.

இதன் மூலம் தமது தேர்தல் வெற்றிகளை பெற்று தமது பதவி நாற்காலிகளை தக்க வைத்து சொந்த சலுகைகளை பெற்று வரும் போலியான நடவடிக்கைகளையே நாம் எதிர்த்து வருகின்றோம். 2009 இல் அழிவு யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போது உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று இங்கு எதுவுமே இருக்க முடியாது என ஜனாதிபதி பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

இதை நாம் வரவேற்றிருந்தோம். அதன்படி எமது மக்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த இடங்கள் சகலவற்றிலும் நாம் மீளக்குடியேற்றுவதில் வெற்றியீட்டி வருகின்றோம்.இன்று வரை ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் அரசுடனும் படைத்தரப்புடனும் தொடர்ச்சியாக பேசியும் வலியுறுத்தியும் வருகின்றோம்.

தொடர்ந்தும் எமது மக்களை தமது சொந்த நிலங்களில் குடியேற்றுவதில் நாம் வெற்றி கண்டும் வந்திருக்கின்றோம். இதுவரை எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி வருவதில் எமது இணக்க அரசியல் வழிமுறை வெற்றி கண்டு வருகிறது.

அதற்காக ஜனாதிபதிக்கும் படைத் தரப்பினருக்கும் எமது மக்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

யார் எத்தகைய சூழ்ச்சிகளைச் செய்தாலும் தடைகளைப் போட்டாலும் தொடர்ந்தும் எமது மக்களை தமது சொந்த வாழ்விடங்களில் குடியேற்றும் எமது மக்கள் பணி தொடரும். வட மாகாண சபை தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கும் போது ஜனாதிபதியின் ஆசியோடு எமது மக்களை பலாலி வரை கொண்டு சென்று குடியேற்றுவோம். இந்த உறுதிப்பாட்டுடனேயே எமது அரசியல் முயற்சிகள் தொடர்கின்றதாக நம்பிக்கையுடன் இருக்கின்றோம்” என்றார்.

Related Posts