Ad Widget

சூதாட்டம்: தடைசெய்யப்படுமா சென்னை, ராஜஸ்தான் அணிகள்?

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை இந்திய உச்ச நீதிமன்றில் சமீபத்தில் தாக்கல் செய்தது.

ipl-chennai-rajastan

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது முத்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்று உள்ளவர்களில் 4 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

ஐ.சி.சி. தலைவரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பவருமான என்.சீனிவாசன், ஐ.பி.எல்.தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் தவறு இழைத்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.

அடுத்த 4 நாட்களில் இந்த 4 பேரும் தங்களது ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கு விசாரணை 24ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

முத்கல் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடைவிதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அணியின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டால் ஐ.பி.எல். போட்டியில் இருந்து நீக்கம் செய்யப்படலாம் என்று விதி உள்ளது. குருநாத் மெய்யப்பனும், ராஜ் குந்த்ராவும், பெட்டிங்கில் ஈடுபட்டதாக முத்கல் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இதனால் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இவர்கள் அளிக்கும் பதில் மனுவைப் பொருத்து இரு அணிகளின் நிலை இருக்கும்.

Related Posts